குற்றால அருவிகளில் அதிகாலையில் திடீர் வெள்ள பெருக்கு
குற்றாலம்: குற்றால அருவிகளில் இன்று அதிகாலையில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வங்கக் கடல் புயல் காரணமாகவும், வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும் வடமாவட்டங்களில் மட்டுமின்றி தென் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துவருகிறது.
இம்மழையின் காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழைபெய்து வருவதால் இப்பகுதியில் உள்ள நீர்த் தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டிய குற்றால அருவிகளில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தண்ணீரின் அளவு அதிகரித்து செம்மண் நிறத்தில் வெள்ளம் பாதுகாப்பு வளையத்தை தண்டி கொட்டவே அங்குள்ள வியாபாரிகள் ஐயப்ப பக்தர்களை குளிக்க செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.

இருப்பினும் சிலர் அதையும் மீறி பாதுகாப்பு வளையம் அருகேயுள்ள பகுதியில் ஓரமாக நின்று குளித்து சென்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அருவிகள் அருகே கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications