விடிய விடிய வெளுத்தெடுத்த மழை.... மனங்களை நிறைத்த பெரு வெள்ளம்!
சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் விடிய விடிய பெருமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கடற்கரையோர மாவட்டங்களில் பேய் மழை எனும் அளவுக்கு மழை பெய்தது.
இதனால் மாநிலம் முழுக்க நீர்த்தேக்கங்கள்,. ஏரிகளில் கணிசமாக மழை நீர் நிரம்பியுள்ளது.

வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை கரையை கடந்தது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இப்போதும் மழை விட்டு விட்டு தொடர்கிறது.
இதனால் நேற்று இரவு முதல் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத் தொடங்கியது.
நேரம் ஆக ஆக நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்தது.

கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து மிகக் குறைவாக இருந்தது. கிருஷ்ணா தண்ணீர் மட்டும் 100 கன அடி வந்து கொண்டிருந்தது. இபோது மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் மழைநீர் 513 கன அடி, கிருஷ்ணா தண்ணீர் 112 கன அடி பூண்டி ஏரியில் நீர் இருப்பு 376 மில்லியன் கன அடியாக உள்ளது.
புழல் ஏரிக்கு 336 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. ஏரியின் நீர் இருப்பு 1520 மில்லியன் கன அடி. செம்பரம்பாக்கம் ஏரியில் 816 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மழை காரணமாக தற்போது ஏரிக்கு 1240 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
சோழவரம் ஏரியில் 163 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு 23 கன அடி தண்ணீர் வருகிறது. மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே ஏரிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் கணிசமாக மழை பெய்துள்ளது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு வேலூர் மாவட்டத்தில் இரு தினங்கள் தொடர்ந்து மழை பெய்தததால், மாவட்டத்தின் பல ஏரிகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளது.
இது அந்த மாவட்ட மக்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications