சென்னையில் ‘பொத்துக்கொண்டு ஊற்றிய வானம்’... ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஜாம்
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த அந்த மேலடுக்கு சுழற்சி, அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று அனேக இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதிலும் குறிப்பாக, கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சென்னையில் பல இடங்களில் காலை முதல் மேகமூட்டமான வானிலை நிலவியது. சில இடங்களில் வெயில் கொளுத்தியது.
ஆனால், சட்டென்று மாறியது வானிலை. தற்போது சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை நந்தனம், வேளச்சேரி, தி.நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, புழுதிவாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக இப்பகுதிகளில் சாலையில் மழைநீர் வெள்ளம் போல ஓடுகிறது. இதனால் ஜிஎஸ்டி சாலை உள்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications