தமிழகத்தில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 347 பேர் பலி - தமிழக அரசு தகவல்
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டு 347 பேர் பலியாகியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்மையில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களில் சிக்கியிருந்த 17 லட்சத்து 64 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்காகவும், மாடிகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கும் சேர்த்து இதுவரை ஒரு கோடியே 28 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த மீட்பு நிவாரணப் பணிகளில், தமிழக காவலர்கள், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து ஆயிரத்து 200 ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 48 குழுக்களும், 400 கடற்படை-கடலோர காவல் படையினரும், 7 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வெள்ளம் அடித்துச் செல்லப்பட்டது, மின்சாரம் தாக்கியது, சுவர் இடிந்து விழுந்தது என பல்வேறு சம்பவங்களின் மூலமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை மாநிலம் முழுவதும் 347 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடிசைகள், கால்நடைகளை இழந்தோருக்கும் உரிய இழப்பீடுகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 278 பேரின் குடும்பங்களுக்கு ரூ.67.47 கோடி நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications