காலையில் சுள்ளென வெயில்… மாலையில் ஜில்லென்ற மழை... சிலுசிலுக்குது சென்னை!
சென்னை: சென்னையில் மாலை நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் என்று பெய்த மழையால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டியது. அனல் காற்று வீசியது. கடந்த வாரங்களில் அவ்வப்போது பெய்த மழையால் குளுமை பரவியது. இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் மாலை நேரங்களில் லேசாக தூரல் போட்டு சென்றது. இதனால் அனல் காற்று சற்றே குறைந்து சென்னையின் வானிலை சற்றே மாறியது.

இன்று காலை முதலே வெயிலும் மேகமூட்டமும் மாறி மாறி வந்த நிலையில் மாலை 4 மணியளவில் மேகங்கள் கூடி வானம் இருட்டியது. திடீரென்று வானம் பொத்துக்கொண்டு ஊற்றியதைப் போல மழை கொட்டியது.

மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, சூளைமேடு, அடையாறு, கோயம்பேடு, சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது.

மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமத்திற்கு ஆளாகினர். தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை,தாம்பரம், பல்லாவரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. திடீர் மழையால் சென்னையின் வானிலை மாறியுள்ளது. குளிர் காற்று வீசுவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications