பொத்துக்கிட்டு ஊத்துது வானம்.. பல மாவட்டங்களில் செம மழை.. மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது
சென்னை: சேலம், விழுப்புரம், சிவகங்கை, புதுகை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையிலிருந்தே மழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. அதேபோல, சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, எம்.பெருமாபாளையம் உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை, திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதேபோல விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூர் அரகண்ட நல்லூர், அந்திலி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் முக்கிய சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications