தொடர்மழை... சாலைகளில் அரிப்பு... திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திண்டுக்கல்: தொடர் மழையால் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் பாதிப்படைந்துள்ளன. தேனி மாவட்டத்தில் மட்டும் சுமார் 150 ஏக்கர் வாழை தோட்டம் மற்றும் திராட்சை தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், வத்தலக்குண்டு-கொடைக்கானல் இடையே டம்டம் பாறை என்ற இடத்தில் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாறை ஒன்று உருண்டு வந்து கார் மீது விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. தகவலறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மண் சரிவை அப்புறப்படுத்தியதால், போக்குவரத்து சீரானது.
கோடை காலத்தை முன்னிட்டு கொடைக்கானலில் தற்போது கோடை விழா நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறை காலமாகையால், அங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு 2 நாட்களாக நடைபெற்ற மலர் கண்காட்சியை காண இயலாமல் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் அறைகளிலேயே முடங்கினர்.
கன்னிவாடி அருகே தட்டயப்பனூர், கன்னி மார்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. ஓடையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் குளத்து நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாசில்தார் மற்றும் போலீசார், ஓடை ஆக்கிரமிப்பை அகற்றி ஊருக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர்.
இதேபோல், ஒட்டன்சத்திரம் அருகே ராமபட்டினம் புதூரில் மழை வெள்ளத்தால் தரைப்பாலம் சேதம் அடைந்தது. அதனை கலெக்டர் ஹரிஹரன் பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் பழனியில் உள்ள வரதமாநதி அணை கடந்த 2 நாட்களுக்கு முன்பாகவே நிரம்பி விட்டது. பாலாறு பொருந்தலாறு, தேக்கந்தோட்டம், பரப்பலாறு ஆகிய அணைகள் 90 சதவீதத்துக்கு மேல் நீர்மட்டம் உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பாசன குளங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஆத்தூர், காமராஜர் அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது.
பெரும்பாலான அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.