மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை... மகிழ்ச்சியில் மக்கள்
மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை: மதுரையில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழைபெய்து வருகிறது.

மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை மழை கொட்டித் தீர்த்தது. மாநகர் பகுதியில் நேற்று மாலை 6.30 மணிக்கு அளவில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அனுப்பானடி, சிந்தாமணி, கோரிப்பாளையம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
புறநகர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், அலங்காநல்லுார், வாடிப்பட்டி, சோழவந்தான், பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது.
மழையின் காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. வடபழஞ்சி, தென்பழஞ்சி, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதேபோல் கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, சேலம், மேட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பெய்த கனமழையின் காரணமாக மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications