தொடரும் கனமழை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை: தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. தீபாவளிப் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப் பட உள்ள நிலையில் இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, நெல்லை, கோவை, திருப்பூர், ஈரோடு, கடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், கோவை, திருப்பூர், திருவாரூர் மற்றும் நெல்லையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரியிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நெல்லையில் இன்று மட்டுமின்றி, நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.