ராமேஸ்வரம் கோவிலில் திடீர் அருவி.. குளமாக மாறிய பிரகாரம்.. நடக்க முடியாமல் சிரமப்பட்ட பக்தர்கள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் அருவி போல மழை நீர் கொட்டியது. பிரகாரமெங்கும் குளமாக மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத்தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர்லிங்கத்தலம் ராமேஸ்வரம். தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 8வது. இத்தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ராமேஸ்வரம். கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. தேவிபட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் முதலான இடங்களில் உள்ளன தீர்த்தங்கள்.

ராமாயண காவியத்தோடு தொடர்புடையது ராமேஸ்வரம். ராமநாதசுவாமியை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அக்னி தீர்த்தக்கடலில் நீராடி விட்டு அங்குள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி விட்டு ராமநாதசுவாமியையும் பர்வதவர்த்தினி தாயாரையும் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
புனித தீர்த்தமாடுவதால் கோவில் எப்போதுமே ஈரத்தோடு காணப்படும். இந்த நிலையில் மழைநீரும் கோவிலுக்குள் புகுந்த காரணத்தால் நேற்று குளமாக மாறியது. ராமேஸ்வரம் நகர் பகுதியில் நேற்று காலை 10.30 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. நேற்று பகல் 2 மணி நேரத்தில் மட்டும் சராசரியாக ராமேஸ்வரம் நகரில் 2 செமீ அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது.
இடைவெளியின்றி பெய்த மழையால் தெருக்களில் உள்ள கால்வாய்களில் இருந்து வெளியேறிய கழிவு நீருடன், மழைநீரும் சேர்ந்து சாலையில் கரை புரண்டு ஓடியது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிக்கப்படாததாலும், சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட கால்வாயில் மழை நீர் செல்லாததாலும் சாலையில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் பிரகாரத்திலும் மழைநீர் புகுந்தது. கோயிலின் மூன்றாம் பிரகாரம் தெற்கு பகுதியில் சமீபத்தில் சுற்றுச்சுவரின் ஒருபகுதி உடைத்து வெளிப்பகுதிக்கு செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. திடீரென்று பெய்த மழையால் உடைத்து அகற்றப்பட்ட சுவர் பகுதி வழியாக மழைநீர் கோயிலுக்குள் புகுந்து அருவி போல கொட்டியது.

இதனால் மூன்றாம் பிரகார தளங்களில் ஓடிய மழைநீர், அம்பாள் சன்னதி செல்லும் வழியெங்கும் தேங்கி நின்றது. மழை நீர் தேங்கியதால் பிரகாரத்தில் நடந்து சென்ற பக்தர்கள் அவதியடைந்தனர். கோயில் ஊழியர்கள் பிரகாரத்தில் தேங்கிய மழை நீரை மோட்டார் வைத்து அகற்றிய பின்னர் பக்தர்கள் வழக்கம் போல சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 23ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்கக் கூடும். இதற்கு முன்னோட்டமாக இன்றும் நாளையும் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications