ஓகி புயல் கோர தாண்டவம் : தமிழகம், கேரளாவில் 8 பேர் பலி #CycloneOckhi
தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை எட்டு பேர் பலியாகி இருக்கிறார்கள்.
கன்னியாகுமரி : ஓகி புயலால் தமிழகம் மற்றும் கேரளாவில் 8 பேர் பலியாகி உள்ளனர்.
வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. கனமழையால் கன்னியாகுமரியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
வீடுகளின் மீது மரங்கள் விழுந்துள்ளதால் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.

எட்டு பேர் பலி
இதுவரை ஓகி புயலால், தமிழ்நாட்டில் நான்கு பேரும், கேரளாவில் நான்கு பேர் என மொத்தம் எட்டு பேர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், திருவனந்தபுரத்தில் கடலுக்குச் சென்ற 250க்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என்றும் , அவர்களைத் தேடும் பணியில் கடலோர காவற்படை ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மரம் விழுந்து பலி
கன்னியாகுமரி மாவட்டத்தில், ராஜாக்கமங்கலம் அருகே கார்த்திகைவடலியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் பலியானார். இதே போல் பரக்குந்தி, மண்டைக்காடு பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியாகி உள்ளனர்.

பாதிப்புகள் அதிகரிக்கும்
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட்டத்தில் பழையாறு உடைந்ததில் சுசீந்திரம், பூதப்பாண்டி உள்ளிட்ட கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை பாதிப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
|
கடலோர காவற்படை தீவிரம்
காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் கடலோர காவற்படையோடு, விமானப்படையும் இணைந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். நவீன தொழிற்நுட்பங்களோடு கூடிய படகுகளும், டோர்னியர் விமானங்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications