சென்னையில் ஜிலீர்.. கொட்டிய மழையால் தணிந்த வெப்பம்
சென்னை : பகலில் வெப்பம் வாட்டினாலும் மாலையில் இருந்து கொட்டி வரும் மழையால் அனல் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. எனினும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சாலையில் தேங்கி போக்குவரத்தை பாதித்தது.
பகலில் வெப்பம், மாலையில் மழை என மாறி மாறி ஏற்படும் கால நிலையால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இன்று மாலை மயிலாப்பூர், ராயப்பேட்டை, வடபழனி, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை வெளுத்து வாங்கியது.

சென்னை உள்பட புறநகரான தாம்பரம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
மேலும் புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணையிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்பகுதிகள் அனைத்தும் மிக தாழ்வான பகுதிகள் என்பதால், மழை நீர் தேங்கியதையடுத்து பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சாதாரணமாகவே மாலை வேளைகளில் அந்த சாலைகளில் போக்குவரத்து கடுமையாக இருக்கும். மழை நீரும் தேங்கியதால், வாகனகங்கள் ஆமை போல் ஊர்ந்தே செல்ல நேர்ந்தது.

இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி மழையை வசைபாடினர்.
திருவொற்றியூர், காசிமேடு, உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் மழை கொட்டித் தீர்த்தது.
சென்னை மட்டுமல்லாது, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டியது
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
புகைப்படம்: பிரபு












Click it and Unblock the Notifications