தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்! வானிலை மையத்தின் 'ஜில்' அறிவிப்பு
வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே சில இடங்களில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே சில இடங்களில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகம் மற்றும் புதுவையில் இந்த ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவைவிட அதிகமாகவே பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பெரும்பாலான மாவட்டங்களில், அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையைப் பொருத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டமாகக் காணப்படும். மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்றும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 60 மி.மீ. பதிவானது. வால்பாறை பி.டி.ஒ., நீலகிரி மாவட்டத்தில் தேவாலாவில் தலா 40 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, தர்மபுரி பி.டி.ஒ., தஞ்சை மாவட்டம் மதுக்கூர், வால்பாறை தாலுகா அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், பேச்சிப்பாறை, கூடலூர் பஜார், செங்குன்றத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.
சேலம் ஏற்காடு, ஒகேனக்கல், தென்காசி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், பாபநாசம், பேராவூரணி, குழித்துறை, தக்கலை, செங்கோட்டை உள்பட 20-க்கும் அதிகமான இடங்களில் தலா 20 மி.மீ. மழை பதிவானது. பட்டுக்கோட்டை, ஒமலூர், ஜெயங்கொண்டம், பென்னாகரம் உள்பட 25-க்கும் அதிகமான தமிழக பகுதிகளில் தலா 10 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.