மக்களுக்கு ஒரு நற்செய்தி.. வட தமிழகத்தில் மழை தொடருமாம்!
வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் விடைபெற்றுள்ள நிலையில் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல்முறையாக கோடை மழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் மழை
இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சென்னை மற்றும் புறநகரில் ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சில நேரங்களில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் மழை பெய்யும்.
மழை பெய்ய வாய்ப்பு
தெற்கு அரபிக்கடல் வங்கக்கடலில் தென்மேற்கு பருவகாற்று வலுவாக வீசுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை தொடரும்
கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று தெற்கு ஆந்திரத்தில் சந்திப்பதால் தமிழகத்தில் மழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகம், தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்.
9 செமீ மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ மழை பெய்துள்ளது . ஜெயங்கொண்டம் மற்றும் கேளம்பாக்கத்தில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.