வட மாவட்டங்களில் மழை பெய்யும்.. ஆனால் தாழ்வுநிலை ஆந்திரா போய் விட்டதாம்!
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த்த தாழ்வுநிலை ஆந்திரா நோக்கி நகர்ந்து விட்டது. இருப்பினும் வட மாவட்டங்களில் அனேக இடங்களில் இன்று மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இருப்பினும் பெரிய அளவிலான மழை இன்னும் ஆரம்பிக்கவில்லை. லேசான மழைதான் இதுவரை சென்னையைப் பொறுத்தவரை பெய்துள்ளது.

இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் அதனால் சென்னை உள்பட தமிழகத்திற்கு பரவலாக நல்ல மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்த தாழ்வுப் பகுதியானது ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று ரமணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது.
அதாவது அது மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்க கடலில் ஆந்திரா அருகே மையம் கொண்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் வடக்கு மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
எதுக்கும் குடையை கையில் பிடித்தபடியே வெளியில் போய் வாருங்கள்...!












Click it and Unblock the Notifications