இந்த ஏரியா.. அந்த ஏரியா.. எல்லா ஏரியாவையும் வெளுக்கும் கனமழை.. இடி மின்னலுடன் கொட்டித் தீர்க்குது!
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மதுரை, திருச்சி, அரியலூர், திண்டுக்கல், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, தமிழ்நாட்டில் வெயில் வாட்டி எடுக்கத் தொடங்கியது. தற்போதைய இந்தப் பருவம் கோடை காலத்தின் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கொட்டித் தீர்க்கும் கனமழை
மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இன்று பகலில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், வானிலை குளிர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், கரூர், நீலகிரி, தேனி, ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த 3 மணி நேரத்துக்கு
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மழை நிலவரம்
17-05-2025 (நாளை) : தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications