சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி - மின்னலுடன் கனமழை !
சென்னை: சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கோயம்பேடு, வடபழனி, சவுகார்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் இன்னும் 48 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் கூறியதாவது: சென்னை மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை, அல்லது இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய கன மழையோ பெய்யக்கூடும் எனக் கூறினார்.

இந்நிலையில், தற்போது சென்னையில் மீனம்பாக்கம், பம்மல், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. கிண்டி, வடபழனி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், போரூர், ராமபுரம், பரங்கிமலை, மணப்பாக்கம், பாடி, மயிலாப்பூர், ஆலந்தூர், அரும்பாக்கம், குரோம்பேட்டை, ராமாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழையால் கோயம்பேடு, வடபழனியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தாம்பரம், பொழிச்சலூர், குரோம்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூர், ஆவடி, அம்பத்துார், அண்ணாநகர், வில்லிவாக்கம் மற்றும் பாடி உள்ளிட்ட இடங்களிலும் காற்றுடன் கனமழை பெய்கிறது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சவுகார்பேட்டை, பாரிமுனை பகுதிகளில் வெள்ள நீர் சாலைகளில் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பேசின் பிரிட்ஜ் பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. அதேபோல் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நேற்று இரவு 8.30 மணிக்கு மேல் நல்ல மழை கொட்டியது. மழையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications