நெல்லை, ராஜபாளையம், போடியில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை: நெல்லை, ராஜபாளையம், மற்றும் போடிநாயக்கனூர் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் குறைந்த அளவே மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குப் பின்னர் மீண்டும் பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் பல இடங்களில், தீபாவளிக்கு முன்னதாக தொடர்மழை பெய்தது. இதன் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. மழை குறைந்த நிலையில், நீர்நிலைகளில் நீர்மட்டம் குறையத் துவங்கியது. இதனிடையே, ஒருவாரத்திற்குப் பின், நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பெய்த மழையால் அங்குள்ள பிளவக்கல் அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலும் மிதமான மழை பெய்துள்ளது. மழை காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications