காய்ந்த பூமியை குளிர்விக்க வந்தது குளு குளு கனமழை... ராமநாதபுர விவசாயிகள் குஷி
மழையே இல்லாமல் காய்ந்து கிடந்த ராமநாதபுரத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம்: வடகிழக்கு மழை பொய்த்துப் போய் பயிர்கள் காய்ந்து விவசாயிகள் வேதனையில் மூழ்கி இருந்தனர். குடிநீருக்கே தட்டுப்பாடு வரும் நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்திலும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்திலும் எதிர்ப்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 65 சதவீதம் அளவிற்கு குறைவாகவே பெய்துள்ளது. இதனால் நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. வரலாறு காணாத வறட்சியின் காரணமாக பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
குடிநீர் பிரச்சினை
வறட்சியும், வெயிலும் ஒரு பக்கம் வாட்டி எடுக்க குடிநீர் பிரச்சனை தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது. ஒரு குடம் நீர் ரூ. 10 முதல் 15 வரை பல இடங்களில் விற்கப்பட்டு வருகின்றன. மேலும், குடங்களுடன் பெண்கள் சாலைகளில் அலைந்து திரிந்து நீரை பிடித்து வருகின்றனர்.
குளு குளு அறிவிப்பு
இந்நிலையில், வானிலை மையம் தென் மாவட்ட கடலோர பகுதிகளில், இரு தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் குளு குளு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மார்ச் 3ம் தேதி தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது.
வந்தேவிட்டது மழை
வானிலை மையம் சொன்னது போன்றே இன்று ராமநாதபுரத்தில் கனமழை பெய்து வருகிறது. முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்று வேதாரண்யம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
போட்டெடுக்க போகும் கோடை
இந்த 2 நாட்களில் மழை பெய்தாலும், இதற்கடுத்து வரும் நாட்களில் கோடை வறுத்தெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மக்களை கொஞ்சம் கலக்கமடையச் செய்துள்ளது.