பக்கத்து வீட்டுக்காரர் அடித்ததால் சோகம்... 61 வயது தாத்தா தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை: பக்கத்து வீட்டுக்காரரின் தொடர் தாக்குதலால் மனமுடைந்த 61 வயது முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலையூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.
சென்னை சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (61). தச்சுத் தொழிலாளியான இவர் சமீபத்தில் தனது வீட்டில் குடியிருந்த ஒரு குடித்தனத்தை காலி செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு அதே பகுதியில் வசித்து வந்த யுவராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருப்பசாமிக்கும், யுவராஜுக்கும் இடையில் இது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று கருப்பசாமியை தெருவில் வைத்து தாக்கியுள்ளார் யுவராஜ். இத்தாக்குதல் தொடர்பாக சேலையூர் போலீசில் புகார் அளித்துள்ளார் கருப்பசாமி. ஆனால், யுவராஜ் மீது போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், தன் மீது புகார் அளித்ததற்காக கருப்பசாமியை மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த கருப்பசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப் பட்டுள்ளது.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததே கருப்பசாமியின் மரணத்திற்குக் காரணம் எனக் கூறி, மாடம்பாக்கம் சாலையில் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் இன்ஸ்பெக்டர் குணவர்மன் தலைமையிலான போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களை சமாதானப் படுத்தினார்கள்.
இது தொடர்பாக சேலையூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications