சென்னையில் நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் ப்ரஷ் சூப்பர் மார்க்கெட் மீது தாக்குதல்!!
சென்னை: 20 தமிழரை படுகொலை செய்ததைக் கண்டித்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் ப்ரஷ் சூப்பர் மார்க்கெட் மீது தமிழ் உணர்வாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
திருப்பதி அருகே 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறை சுட்டுப் படுகொலை செய்தது. இந்த படுகொலைக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவே உத்தரவிட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த படுகொலைக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் ப்ரஷ் என்ற சூப்பர் மார்க்கெட் விற்பனை நிறுவனம் மீது தமிழ்த் தேசிய எழுச்சி இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். (இந்தியா முழுவதும் உள்ள ஹெரிட்டேஜ் ப்ரஷ் சூப்பர் மார்க்கெட் கடைகள் நாயுடு குடும்பத்துக்கு சொந்தமானவை)
கடையின் முன்புற பலகைகள், கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியதுடன் உள்ளே நுழைந்தும் தாக்குதல் நடத்தினர். இதில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
பின்னர் போலீசார் தமிழ்த் தேசிய இயக்கத்தினர் இருவரையும் கைது செய்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஹெரிட்டேஜ் ப்ரஷ் கடையின் மற்றொரு கிளை உடனடியாக மூடப்பட்டது.