90 நாட்கள் கோரியதற்கு ஒருநாள் மட்டும் அனுமதியா? நாளை போராட்டம் நடத்தப்போவதில்லை -அய்யாகண்ணு
சென்னையில் ஒருநாள் போராட்டம் நடத்தப்போவதில்லை என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினாவில் நாளை ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் 90 நாள் கோரியதற்கு 1 நாள் மட்டும் அனுமதி கொடுத்தது சரியல்ல என்றும், அதனால் நாளை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதில்லை என்றும் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை என கூறி தமிழகத்தில் பல போராட்டங்களை அய்யாக்கண்ணு முன்னெடுத்துச் சென்று வருகிறார்.அதன்படி காவிரி வாரியம் கோரி மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு அனுமதி கோரி வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கானது கடந்த 12-ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், 90 நாட்கள் போராட்டத்திற்கெல்லாம் அனுமதி தர இயலாது என்றும், டெல்லியில் நடத்தியது போன்று அரை நிர்வாண போராட்டங்களில் ஈடுபட கூடாது, ஏனெனில் மெரினா கடற்கரை பொதுமக்கள் வரும் இடம் என்றும் தெரிவித்திருந்தனர். அதேபோல, காவிரியைவிட மெரினா கடற்கரைதான் முக்கியமா எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், 90 நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், சென்னை மெரீனா கடற்கரையில் காவிரிக்காக ஒரு நாள் மட்டும் அய்யாக்கண்ணு உண்ணாவிரத போராட்டம் நடத்த தமிழக அரசு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, 90 நாட்கள் கோரியதற்கு ஒருநாள் மட்டும் அனுமதித்தது சரியல்ல என்று அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இதனால் சென்னை மெரினாவில் நாளை போராட்டம் நடத்த போவது இல்லை என்றும், மெரினாவில் தொடர் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications