திமுக தலைவர் கருணாநிதி மீது விசாரணை கமிஷன் அமைக்க கோரிய மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது
சென்னை: கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தின்போது நடந்த முறைகேடுகள் தொடர்பாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் மீது விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.
வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கொடுத்த பேட்டியில், கடந்த 2006-11 ஆம் ஆண்டில் நடந்த ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேசியதாக பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக உள்ள அவர், இவ்வாறு தெரிவித்து இருப்பது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, ஸ்டாலின் சொன்னது போல, திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து கண்டறிய, அப்போதைய முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த ஆணையம் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதி, பத்திரிகையில் வந்த அவரது பேட்டியை வைத்து வழக்கு போட்டு உள்ளீர்கள். சரி, அவர் கூறியதாக சொல்லும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு உங்களிடம் ஆதாரங்கள் உள்ளதா?. என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications