ஹைகோர்ட் தலைமை நீதிபதி விசாரணை அறையில் போராட்டம் நடத்திய 10 பேருக்கும் ஜாமீன்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் விசாரணை அறையில் போராட்டம் நடத்திய 10 பேருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 14ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் விசாரணை அறையில் வக்கீல்கள் சிலர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வாயில் கருப்புத் துணியைக் கட்டி அவர்கள் போராடினர்.
இதுகுறித்து உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 8 வழக்கறிஞர்கள் மற்றும் 2 சட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கைதானவர்கள் 10 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜாமீன் வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதனை விசாரித்த எஸ்.வைத்தியநாதன், இன்று 10 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.