குடியிருப்பு பகுதியில் பட்டாசு குடோனுக்கு அனுமதியா? அதிகாரிகளுக்கு மதுரை ஹைகோர்ட் சரமாரி கேள்வி
மதுரை: 8 பேரை பலி கொண்ட சிவகாசி வெடிவிபத்து குறித்து தாமாகவே முன் வந்து ஏற்று ஐகோர்ட் மதுரை கிளை இன்று விசாரணை நடத்தி வருகிறது.
சிவகாசி புறவழிச் சாலையில் உள்ள ஆனந்தன் என்பருக்கு சொந்த பட்டாசு கடை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக் குறித்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை தாமாகவே முன் வந்து இன்று விசாரணையை மேற்கொண்டுள்ளது.

நீதிபதி நாகமுத்து, நீதிபதி முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் போது விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரை அழைத்து நீதிபதிகள் விசாரித்தனர்.
அப்போது, நோயாளிகள் பலர் வந்து செல்லும் ஸ்கேன் சென்டர் அருகில் யார் பட்டாசு கடையை நடத்த அனுமதி கொடுத்தது என்றும், சுற்றிலும் குடியிருப்பு பகுதிகளைக் கொண்ட இந்தப் பகுதியில் பட்டாசு கடை வைக்க எப்படி அனுமதிக்கப்பட்டது என்றும் கேள்விகள் எழுப்பினர்.
மேலும், சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீக்காயப் பிரிவு இருக்கிறதா என்றும் அதுதொடர்பான மருத்துவர்கள் இருக்கின்றார்களா என்றும் நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு அரசுத் தரப்பில் போதிய அளவு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு, போதிய அளவு மருத்துவர்கள் இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் என்று இடைமறித்து நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வரும், இதுபோன்ற பட்டாசு விபத்து பலிகளைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்னென்ன? எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? என்று அடுக்கான கேள்விகளை நீதிபதிகள் கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications