தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. தனிநபர் விசாரணை ஆணையத்துக்கு தடையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தும் தனிநபர் ஆணையத்துக்கு தடையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தனி நபர் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடையில்லை என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் மாட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, விசாரணை நடத்துவதற்கு, தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த தனி நபர் விசாரணை ஆணையத்திற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் தமிழக அரசு அறிவித்த தனி நபர் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடைகோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. அந்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தனி நபர் விசாரணை ஆணையம் அமைத்த தமிழக அரசின் அரசாணையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் நடந்த துப்பாக்கிச்சூடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு, தனிநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்துவதற்கு முன்பாக, அரசே முன்முடிவோடு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதனால், ஆணையத்தின் விசாரணை நியாயமாக நடைபெறாது என்பதால், இந்த ஆணையத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அர்ஜுனன் மனுவை விசாரித்த நீதிபதிகள், தனிநபர் விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்றும், இந்த விசாரணை குறித்து அரசே முன்முடிவு எடுக்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.