குண்டும், குழியுமாய் ரோடு இருந்தால் “டோல்” வசூலிக்கத் தடை விதிப்போம் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தில் சாலைகளை சரியாக பரமாரிக்காவிட்டால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதமன்றத்தில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், "சென்னை-வாலாஜாபாத்-பெங்களூரு இடையே தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு செல்லும் வாகனங்களுக்கு ரூபாய் 40, ரூபாய் 50 தொகையை சுங்க கட்டணமாக வசூலிக்கின்றனர்.
சாலையில் சிரமமின்றி வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப அதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கத்தில்தான் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சரிவர பராமரிக்காத நிறுவனம்:
ஆனால் சாலையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் சரிவர பராமரிப்பதில்லை. கட்டணமும் கொடுத்துவிட்டு குண்டும், குழியுமான சாலையில்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுகிறது.

அடிக்கடி விபத்து:
முறையான பராமரிப்பு இல்லாததால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, சாலை பராமரிப்பு பணிகளை அந்த நிறுவனம் செய்து முடிக்கும் வரை சென்னை-பெங்களூரு இடையே சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு அந்த நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹைகோர்ட் விசாரணை:
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.

இந்திய சாலை அமைப்பு:
அவர்களுடைய உத்தரவின்படி, "சென்னை-வாலாஜாபாத்-பெங்களூரு நெடுஞ்சாலை பராமரிப்பு பற்றி இந்திய சாலை அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதை படிக்கும்போது, சுங்கம் வசூலிக்கும் நிறுவனத்தால் அந்த சாலை சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

சரியான மேற்பார்வை இல்லை:
மேலும், அந்த சாலையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்பார்வை செய்யவில்லை என்பதையும் அறிய முடிகிறது. சாலையைச் சரிவர பராமரிக்காத நிலையில் அதற்கான சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை ஏற்கமாட்டோம்.

அரசு பேருந்துகளின் கட்டணம்:
இந்த வழக்கில் சுங்கம் வசூலிக்கும் நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நடைக்கு மேல் சாலையைப் பயன்படுத்தினாலும், அதற்கான கட்டணத்தை தருவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் பதில் தேவை:
ஆனால், சாலையை பராமரிக்காத பட்சத்தில் மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படுகிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் செலுத்த வேண்டிய சுங்க தொகையை கொடுப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை பற்றி அரசு வழக்கறிஞர் பதிலளிக்க வேண்டும்.

சுங்கக் கட்டணத்திற்கு தடை:
இந்திய சாலை அமைப்பு கூறியுள்ள குறைகள் நீக்கப்பட வேண்டும். இதைச் செய்வதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சுங்கம் வசூலிக்கும் நிறுவனம் தவறும் பட்சத்தில், சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தடை செய்து உத்தரவு பிறப்பிப்போம்.

வழக்கு ஒத்திவைப்பு:
இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 3 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications