விஸ்வரூபம் எடுக்கும் நடராஜர் விவகாரம்! யூ டூ புரூட்டஸ் விஜய்யை கைது செய்ய இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் தில்லை காளியை அவதூறாக விமர்சித்து யூடியூபில் வீடியோ வெளியிட்ட யூ டூ புரூட்டஸ் சேனல் மற்றும் அதன் உரிமையாளர் விஜய் நெல்சனை கைது செய்ய கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
யூ டூ புரூட்டஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவர் மைனர் விஜய். இவர் தனது சேனலில் அரசியல் தொடர்பான கருத்துகளை நகைச்சுவையாக தெரிவித்து வருகிறார். அந்த வகையில் பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் இந்துத்துவா அமைப்புகளை விமர்சித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்துக்களின் தெய்வமான நடராஜர் குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை மைனர் விஜய் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

வீடியோ
இந்த வீடியோ பல தரப்பட்ட இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது. அதிலும் நடராஜரின் நடன அசைவுகளை மிகவும் மோசமாக சித்தரித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சிவனை இகழ்ந்தவனை உடனே கைது செய் தமிழக அரசே என பதிவிட்டிருந்தார்.

ஆதம்பாக்கம் போலீஸ்
ஆனால் அவர் யாரை சொல்கிறார் என தெரியாமல் இருந்தது. சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகரில் வசிக்கும் இந்து மக்கள் கட்சியின் சென்னை மாநகர தலைவர் கண்ணன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மைனர் விஜய் மீது புகார் அளித்தனர்.

ஆர்ப்பாட்டம்
இந்த சேனலை முடக்கக் கோரியும் வீடியோவை வெளியிட்ட மைனர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தியும் புகாரளித்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கீழ் வீதி நடராஜர் கோயில் வாயிலில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் ஊர்வலகமாக புறப்பட்டு சென்றனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 2ஆம் தேதியும் வேலூரில் இந்து முன்னணியினர் சிவன் வேடமணிந்து கொண்டு மைனர் விஜய்யை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications