இன்னொரு அயோத்தியா மதுரா? மசூதியில் அனுமன் பஜனை நடத்துவதாக இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை-பதற்றம்
மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் சர்ச்சைக்குரிய மசூதிக்குள் நுழைந்து வழிபாடு நடத்தப் போவதாக இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. மதுராவில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோவில் உள்ளது. இங்கு பழைய கிருஷ்ணர் கோவில் இடிக்கப்பட்டு 1662-ல்
ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த் மசூதியை அகற்றி அந்த நிலத்தை மதுரா கோவிலுக்கு தர வேண்டும் என்பது இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை. இது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி ராமர் பிறந்த இடம்; அங்கே பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்துத்துவா அமைப்பினர் கூறினர். பின்னர் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதியை இந்துத்துவா அமைப்பினர் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் நாடு முழுவதும் மதவன்முறைகள் வெடித்தன. அயோத்தி, மதுரா விவகாரங்கள் ஒரே மாதிரியானவை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே கோவில், மசூதி நிலம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இதேபோல் காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டிய ஞானவாபி மசூதியும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
இது தொடர்பான வழக்குகளில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் இந்துக்களுக்கு வழங்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனடிப்படையில் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி விவகாரத்தைப் போல மதுரா, காசி மசூதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என இந்துத்துவா தரப்பு முயற்சிக்கிறது.
இதன் ஒரு பகுதியாக பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான இன்று டிசம்பர் 6-ல் மதுராவில் சர்ச்சைக்குரிய ஈத்கா மசூதிக்குள் நுழைந்து அனுமன் பஜனையை பாடுவோம் என அகில பாரத இந்து மகாசபை அறிவித்தது. இதனால் மதுராவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மதுரா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுராவில் 1,000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டும் அகில பாரத இந்து மகாசபை இதேபோல மதுரா ஈத்கா மசூதியை குறிவைத்து போராட்டத்தை முன்னெடுத்தது. ஆனால் மதுரா மாவட்ட நிர்வாகம் இந்த முயற்சியை தடுத்து நிறுத்தியது. இந்த ஆண்டும் அதேபோல அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதால் மதுராவில் பதற்றம் தொடருகிறது.