இந்து முன்னணி நிர்வாகி திண்டுக்கல்லில் வெட்டிக்கொலை - பதற்றம்
இந்து முன்னணி பிரமுகர் திண்டுக்கல்லில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் : இந்து முன்னணி பிரமுகர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை தடுக்க வந்த மனைவி மீதும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
திண்டுக்கல் நாகல் நகர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணி மாறன். ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்து மக்கள் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த மணி மாறன் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி இந்து முன்னணியில் இணைந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் தனது குடும்பத்துடன் இருந்த போது அங்கு புகுந்த மர்ம நபர்கள் மணி மாறனை கத்தி மற்றும் அரிவாளால் பயங்கரமாகத் தாக்கினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தடுக்க வந்த அவரது மனைவி பிரியாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தியினை யொட்டி நாகல் நகர் சந்தை பேட்டை பகுதியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இந்து முன்னணியினர் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கோவையில் இந்து முன்னணி நிர்வாகி கொலை செய்யப்பட்டார். இதேபோல ஓசூர் பகுதியில் இந்து முன்னணியை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திண்டுக்கல் நகரில் இந்துமுன்னணி நிர்வாகி மணிமாறன் வெட்டிக்கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications