நாத்திகர் கட்டுப்பாட்டில் ஸ்டாலின்.. பட்டின பிரவேச தடை இந்து விரோதம் -இந்து முன்னணி தலைவர் ஆவேசம்
மயிலாடுதுறை: பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை தடை செய்ததன் மூலம் இந்துக்கள் பண்பாட்டை அழிக்கும் நோக்கத்துடன் திமுக அரசு செயல்பட்டு மடாதிபதிகளை மிரட்டுவதாக மயிலாடுதுறையில் இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்து முன்னணி அமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புத்தாண்டு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கோவில்கள் இடிப்பு
அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் இந்துக்களுக்கு விரோதமான ஆட்சி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை திமுக அரசு இடித்துள்ளது. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்களுடைய ஆட்சி நடப்பது போன்ற மனப்பான்மையில் செயல்பட்டு வருகின்றனர்.

முதலமைச்சரை நாத்திகர்கள் இயக்குகிறார்கள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடக்கக்கூடிய பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை இந்துக்கள் பண்பாட்டை அழிக்கும் நோக்கில் தமிழக அரசு தடை செய்துள்ளது. சில அரசியல் கட்சிகள் மற்றும் நாத்திகவாதிகள் தமிழக முதலமைச்சரை இயக்குகின்றனர். இந்துக்களுடைய கட்டுபாடுகளை கலைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்.

இந்து விரோத கட்சிகள்
திமுக அரசு மடாதிபதிகளை மிரட்டுகிறது. இதனால் பலர் அச்ச உணர்வோடு இருகின்றன. இருப்பினும் மதுரை ஆதீனம் துணிந்து செய்தியாளர்களை சந்தித்தது பாராட்டக்கூடியது. இந்துக்களின் கலாச்சாரத்தை உடைக்க வெளிநாடுகளில் இருந்தும் சதி நடைபெறுகிறது. மதச் சார்பற்ற நாடு என்பது பெயரளவில் மட்டும் இருக்கிறது. அரசின் கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்து விரோத கட்சியாக உள்ளன." என்றார்.

பட்டினப்பிரவேசம்
வரும் 22 ஆம் தேதி பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை தருமபுர ஆதீனம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு கோட்டாட்சியர் தடை விதித்ததற்கு இந்து அமைப்பினரும், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கோட்டாட்சியரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவை, தமிழ்நாடு கோயில்கள் மற்றும் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை ஆகிய அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தருமபுரம் ஆதீனம்
தருமபுர ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் ஏற்றி சுமந்து செல்வது வழக்கமாக உள்ளது. பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் தருமபுரம் ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரை தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றார்.












Click it and Unblock the Notifications