மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய படை பாதுகாப்பை இந்து அமைப்புகள் கேட்பது ஏன்??
Recommended Video

மதுரை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து தமிழகம் முழுவதிலுமுள்ள கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பிரபலமான கோயில்களை தமிழக அரசின், இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறது. கோயிலுக்கு வரும் காணிக்கை, கடை வாடகை வருமானம் போன்றவற்றை அறநிலையத்துறை எடுத்துக்கொள்கிறது.
கோயிலின் நிர்வாக பணிகளை இந்து அறநிலையத்துறை மேற்கொள்கிறது.

அடிப்படை வசதிகள்
ஆனால், அறநிலையத்துறை செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பது இந்து அமைப்புகள், பக்தர்களின் குற்றச்சாட்டு. கோயிலில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தராதது, முறைகேடுகள் போன்ற குற்றச்சாட்டுகளை அறநிலையத்துறை மீது மக்கள் முன் வைக்கிறார்கள். சமீபத்தில், கோயில்களில் தேர், விமானம் செய்ததில் 100 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டதாக அறநிலையத்துறை மீது ஊடகங்களில் சில குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மீண்டும் கோரிக்கை
பிற மத வழிபாட்டு தலங்களை அரசு கட்டுப்படுத்தாத போது, இந்து கோயில்களை மட்டும் கட்டுப்படுத்துவதா என்ற கேள்வியை தீவிர இந்து அமைப்புகள் பலகாலமாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மீண்டும் இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

மத்திய பாதுகாப்பு படை
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடை வாடகை வருவாய்தான் இந்து அறநிலையத்துறையின் நோக்கம். தீ விபத்திற்கு அறநிலையத்துறைதான் காரணம். அறநிலையத்துறை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட்டு வெளியேற வேண்டும். மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றார்.

பாதுகாப்பு
இந்து அறநிலையத்துறை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தை மட்டும் விட்டுக்கொடுப்பது என்பதற்கு வாய்ப்பில்லை. அதேநேரம், பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு தேவை என அரசு சார்பில் கோரிக்கைவிடுத்து பாதுகாப்பை பலப்படுத்தலாம். ஆனால், பாதுகாப்பு படை, இந்து அறநிலையத்துறைக்கு எதிராக எதையும் செய்ய முடியாது. பாதுகாப்பு, ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற பணிகளின்போதுதான், மத்திய பாதுகாப்பு படையை பயன்படுத்த முடியும். இந்து அறநிலையத்துறையை வெளியேற்றிவிட்டு ஹிந்தி பேசும் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணிக்கு அமர்த்தினால் அது பக்தர்களும், வியாபாரிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்தும் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.

சீர் செய்ய வேண்டியது கட்டாயம்
இந்து அறநிலையத்துறையின் மீது குவியும் புகார்களால் இதை சரி செய்து கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அந்த அமைப்பு உள்ளது. அல்லது, மொத்தமாகவே இந்து கோயில்கள் அனைத்திலிருந்தும் அறநிலைய துறையை வெளியேற்றிவிட்டு கோயில் நிர்வாக கமிட்டியின் நிர்வாகத்தில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications