கோவை குண்டு வெடிப்பு.. மத கலவரம்.. இந்து இஸ்லாமிய பிரச்சனையை மையமாக வைத்து வரும் அடங்காதே!
இந்து இஸ்லாமிய பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ''அடங்காதே'' படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: இந்து இஸ்லாமிய பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ''அடங்காதே'' படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற ஜீ.வி பிரகாஷ் படங்களை போல இந்த படத்தை எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. பர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் என்று எல்லாமும் இணையம் முழுக்க பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் படம் வெளியாகும் முன்னே பீபி எகிறி உள்ளது.
புதுமுக இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இந்த படத்தை எம்.எஸ்.சரவணன் தயாரித்து வருகிறார். இதில் சுரபி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், சரத்குமார், மந்திரா பேடி, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்து இஸ்லாம் மத கலவரம்
இந்த படத்தில் 1998 கோவை குண்டுவெடிப்பு குறித்தும் காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதில் நடந்த விஷயங்களை இதில் சேர்த்து இருக்கிறார்கள். அதேபோல் கோத்ரா ரயில் எரிப்பு குறித்தும், இதில் பேச இருக்கிறார்கள். முழுக்க முழுக்க இந்து இஸ்லாமிய கலவரத்தை மையாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தீவிர உழைப்பு
இந்த படத்தில் டீட்டெய்லிங்தான் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. டிரைலரில் முதல் காட்சியிலேயே ''ஆல் பாரத் பீப்பிள் சேவா பார்ட்டி'' எனப்படும் வலதுசாரி கட்சி ஒன்றின் அலுவலகம் காட்டப்படுகிறது. அதேபோல் தொடர்ச்சியாக வலதுசாரி இயக்கங்கள் பற்றிய காட்சிகள் வருகிறது. அகமது புக் ஷாப் என்ற இஸ்லாமியரின் கடை காவி உடை அணிந்த மதக் கலவரகாரர்களால் எரிக்கப்படுவது போல காட்சி அமைப்பட்டுள்ளது. அதேபோல் வேதத்தில் யார் எப்படி வாழ வேண்டும் என்று காவி உடை அணிந்து ஒருவர் பேசுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையும் காசியும்
முக்கியமாக இதில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் சம்பந்தமான காட்சிகள் மறைமுகமாக இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இது ஒரு உண்மை கதை என்று இயக்குனர் கூறி இருப்பது படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு கோவை, சென்னை, காசியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மிரட்டல் வந்தது
இதுகுறித்து ஏற்கனவே படத்தின் இயக்குனருக்கு மிரட்டல் சென்றது குறிப்பிடத்தக்கது. புதுமுக இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி, தனக்கு சில இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார். இதில் இந்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று ஒருசாரர் தெரிவித்துள்ளனர். ஆனால் இது உண்மை கதை மட்டுமே, மிகைப்படுத்தப்பட்ட விஷயம் எதுவும் இதில் இல்லை என்று இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

என்ன நடக்குமோ
சாதாரண எதிர்ப்பை தெரிவித்த மெர்சல் படத்திற்கே பாஜகவினர் பெரிய அளவில் பிரச்சனை செய்தனர். அதேபோல் குறியீடுகளை கொண்ட காலா படத்தை பார்த்து மெர்சல் ஆனார்கள். இப்போது கொஞ்சம் கூட அடக்கி வாசிக்காமல் வெளிப்படையாக பேசி இருக்கும் அடங்காதே படம் வெளியான பின் என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications