மதுரை சித்திரை திருவிழாவில் குண்டு வெடிக்கும்: மிரட்டல் விடுத்தவர் கைது
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் ஒருவர் வெடிகுண்டு வைத்து நாச வேலையில் ஈடுபடப் போவதாக போன் மூலம் மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மேல்அனுப்பானடியைச் சேர்ந்தவர் ஜான்சன்(24). அவருக்கும் அதே பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளியான சதீஷ் என்பவருக்கும் இடையே பகையாக இருந்துள்ளது. இதனால் சதீஷை பழிவாங்க நினைத்த ஜான்சன் அவரை போலீசில் சிக்க வைக்க திட்டமிட்டார். அண்மை காலமாக மதுரையில் அடிக்கடி பொய் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில் அதன் மூலமே சதீஷை மாட்டிவிட முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மதுரை சித்திரை திருவிழாவில் குண்டு வைக்கப் போவதாக சதீஷ் பேசிக் கொண்டிருந்ததாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனே போலீசார் சதீஷை கண்டுபிடித்து விசாரித்தபோது அது பொய் என்று தெரிய வந்தது.
விசாரணையில் ஜான்சனுக்கும், சதீஷுக்கும் இடையே உள்ள பகை குறித்து போலீசார் தெரிந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் ஜான்சனை கைது செய்தனர்.