சென்னையில் இந்து கண்காட்சி... பெண்மையை போற்றும் 'கன்யா வந்தனம்'... சிறார்கள் பாதபூஜை
சென்னை: சென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக கண்காட்சியில் இன்று பெண்மையை போற்றும் வகையில் 'கன்யா வந்தனம்' நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடைபெற்று வருகிறது. நேற்று, 'மாத்ரு - பித்ரு வந்தனம் - ஆச்சார்ய வந்தனம்' என்று தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள 6 நற்பண்புகளில் ஒன்றான ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களை வணங்குதலை, இளைய தலைமுறையினர் முழுமையாக கடைப்பிடிக்கும் வகையில் 1,008 தமிழாசிரியர்கள்- ஆசிரியர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சிநடைபெற்து.
இதற்காக ஆசிரியர்களுக்கு வேட்டி, நீல நிற சட்டை, தோளில் போடும் துண்டு மற்றும் ஆசிரியைகளுக்கு நீல நிறத்தில் புடவையும் வழங்கப்பட்டிருந்தது. இதனை அணிந்து அனைவரும் ஒரே மாதிரியாக விழா பந்தலில் அமரவைக்கப்பட்டு இருந்தனர்.
இவர்களுக்கு அமிர்தா, பத்மா ஷேசாத்திரி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த 1,008 மாணவ, மாணவிகள் பாதபூஜை செய்து வழிபட்டனர்.
இந்நிலையில், இன்று பெண்மையை போற்றும் வகையில் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை, பெண்மை குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பெண்மை மீது மரியாதையை வளர்க்கவும், பெண்களின் கவுரவத்தை காக்கவும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 1000-க்கும் மேலான சிறு பெண்களைப் போற்றும் வகையில் 'கன்யா வந்தனம்' நடத்தப்பட்டது.
அப்போது, சிறுவர்கள் வரிசையாக கீழே அமர்ந்திருந்தனர். சிறுமிகள் சேரில் அமர்ந்திருந்தனர். சிறுவர்கள், சிறுமிகளின் பாதங்களில் பூக்களை வைத்து பாத பூஜை செய்தனர்.
கின்னஸ் சாதனையாளர் பரிமளா நடத்தும் திருமுறை திருப்புகழ் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இந்த கண்காட்சி ஏற்பாடுகளை ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, துணைத்தலைவர் ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.