மன்னார்குடி: 40 நாள் குழந்தை உட்பட 3 பேர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு 3 ஆயுள் தண்டனை
மன்னார்குடி அருகே ஒரு மாத கைக்குழந்தை உட்பட 3 பேர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்: மன்னார்குடி அருகே ஒரு மாத கைக்குழந்தை உட்பட 3 பேர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 சிவசுப்பிரமணியனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் ராமகிருஷ்ணன் மற்றும் துரைராஜ் ஆகிய இருவருக்கும் தலா 30 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் அருகில் உள்ள கீழ மருதூரை சேர்ந்தவர் பழனியப்பன் என்பவரும் அமிர்தவள்ளி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கோவையில் வசித்து வந்தனர். குழந்தை பிறந்ததையடுத்து ஓராண்டுக்குப் பின் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

கணவன் மனைவி கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த பழனியப்பனின் சகோதரர்கள் ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன் துரைராஜ் மற்றும் அவரது நண்பர் மகேந்திரன் ஆகியோர் கடந்த 10.12.2014 அன்று அமிர்தவள்ளியையும் பழனியப்பனையும் வெட்டிப் படுகொலை செய்தனர்.

ஒரு மாத குழந்தையும் கொலை
பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையையும் அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்தனர். கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டு ஆற்றிலும், வயலிலும் சடலமாக கிடந்தனர்.

கலப்பு திருமணம் பிடிக்கவில்லை
இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகள் 4 பேரையும் கோட்டூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பழனியப்பன் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்தது எங்களுக்கு பிடிக்கவில்லை என்றனர்.

ஆண்குழந்தை பிறந்ததால்..
ஏற்கனவே சொத்து பிரச்னையும் இருந்து வந்த நிலையில் பழனியப்பன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்ததால் எதிர்காலத்தில் சொத்து பிரச்னை வரும் என கருதி மூவரையும் கொலை செய்வது என முடிவு செய்ததாக தெரிவித்தனர்.

கழுத்தை நெரித்து
சம்பவத்தன்று இரவு ஆதிச்சபுரம் ஆர்ச் பஸ் நிறுத்தத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வந்த பழனியப்பனை பார்த்த ராமகிருஷ்ணன் பின்னர் சிவசுப்ரமணியனுக்கு தகவல் கொடுத்ததாகவும் ரோட்டில் தனியாக நடந்து சென்றபோது பழனியப்பனை 4 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரிவித்தனர்.

குழந்தையை பாலித்தீன் பையில்
அமிர்தவள்ளியையும் கழுத்தை நெரித்து கொன்று இருவரையும் வெவ்வேறு இடத்தில் தூக்கி வீசியதாகவும் குழந்தையை பாலித்தீன் பையில் போட்டு கட்டி கழுத்தை நெரித்து கொன்றதாகவும் பின்னர் ஆர்ச் வேதபுரம் சாலையில் உள்ள சுடுகாட்டில் வீசியதாக வாக்குமூலம் அளித்தனர்.

3 பேருக்கு 3 ஆயுள்
இந்த வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் அண்மையில் தீப்பளித்தநிலையில் இன்று தண்டனை விவரத்தை அறிவித்துள்ளது. அதன்படி சிவசுப்பிரமணியம், துரைராஜ், ராமகிருஷ்ணன் ஆகிய மூன்று பேருக்கும் 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தலா 37 ஆண்டுகள் சிறை
சிவசுப்பிரமணியனுக்கு 37 ஆண்டுகளும் ராமகிருஷ்ணன் மற்றும் துரைராஜ் ஆகியோருக்கு தலா 30 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு உடைந்தையாக இருந்த மகேந்திரன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

விடுவிக்கக்கூடாது
நன்னடத்தை மற்றும் பொதுமன்னிப்பு அடிப்படையில் 3 பேரையும் விடுவிக்கக்கூடாது என்றும் நீதிபதி கார்த்திகேயேன் நிபந்தனை விதித்துள்ளார். நீதிபதி கார்த்திகேயனின் இந்த தீர்ப்புக்கு வழக்கை தொடர்ந்த எவிடன்ஸ் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

3 பேருக்கு ஆயுள் தண்டனை
உடுமலைபேட்டை சங்கர் ஆணவ கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் அண்மையில் 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியது. இந்நிலையில் ஒரு மாத குழந்தை உட்பட 3 பேர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications