ரூபாய் நோட்டுகள்: மருத்துவமனைகள் மனித நேயத்துடன் நடக்க தவ்ஹித் ஜமாஅத் வலியுறுத்தல்!
பழைய ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மருத்துவமனைகள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுக்கும் நோயாளிகளிடம் மருத்துவமனைகள் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் விடுத்துள்ள அறிக்கையில் '500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ஆம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து , பல்வேறு கடைகள் மற்றும் மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஏற்க மறுத்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில இடங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வழங்குவோருக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க மறுத்ததால் மும்பையில் ஒரு குழந்தை உட்பட சிலர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோருக்கு உதவிடும் வகையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு கொள்ளும்பட்சத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு, மருத்துவமனைக்கு நேரில் சென்று அதற்கு பதிலாக தங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மலம் பணத்தை செலுத்தும் சேவையை 3 நாட்கள் மேற்கொண்டது. இதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மேலதிமான எவ்வித கட்டணத்தையும் பெறவில்லை. இதுதொடர்பான குறுஞ்செய்திகள் வாட்ஸ் ஆப் வாயிலாகவும், முகநூல் வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.
பல தனியார் மருத்துவமனைகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க தொடர்ந்து மறுத்து வருகின்றன. தினந்தோறும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு கொள்ளும் பொது மக்கள் ஜமாஅத் உதவி செய்திட கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும் தங்களால் இயன்ற அளவு பொதுமக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.
மருந்துக் கடைகள் எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதி வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு நவம்பர் 24ஆம் தேதி வரை பொதுமக்கள் வழங்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தனியார் மருத்துவமனைகள் ,ஸ்கேன் சென்டர்கள், பரிசோதனை நிலையங்கள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள் ஆகியவை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் மருத்துவமனைகள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.