ஓசூர் அரசு பஸ்ஸில் உறைந்த பயணிகள்! சீட் அடியில் 38 ஆயிரம்.. யாரும் எதிர்பார்க்காத பெண் செய்த காரியம்
சென்னை: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்ற பழமொழியை பொய்யாக்கும் வகையில், இன்றைய காலகட்டத்திலும் நேர்மை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு சான்றாக ஓசூர் அருகே ஒரு சூப்பர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த நிகழ்வு, சமூகத்தில் மனிதாபிமானம் இன்னும் குறையவில்லை என்பதை உரக்கச் சொல்கிறது. அப்படியென்ன நடந்தது? இங்கே பார்க்கலாம்.
சூளகிரி அருகே உள்ள எலசேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனிரத்னா என்பவருக்கு 28 வயதாகிறது.. இவர் தன்னுடைய தேவைக்காக 38 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு கைப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டு, பெரிகை பகுதியிலிருந்து அரசு பேருந்து மூலம் சூளகிரி நோக்கிப் பயணம் செய்துள்ளார்.

பஸ்ஸில் பயணம் முடிந்து சூளகிரி பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், அவசரத்தில் இருக்கையில் தான் வைத்திருந்த கை பையை எடுக்க மறந்துவிட்டார்.. அதனால், தன் கையில் இருந்த கைப்பையை பேருந்து இருக்கையிலேயே வைத்துவிட்டு, ஏதோ ஒரு கவனத்தில் மூழ்கி, தன்னுடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
கைப்பையில் 500 ரூபாய் நோட்டுகள்
கொஞ்ச நேரம் கழித்து பணப்பை தொலைந்ததை அறிந்த முனிரத்னா அதிர்ச்சியில் உறைந்து போனார். பல்வேறு இடங்களிலும் தேடியும், எங்கும் பணம் கிடைக்காததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அந்தப் பணம் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தபோது, அது கிடைக்க வாய்ப்பில்லை என்றே அவர் கருதியிருந்தார்.
அதே நேரத்தில், சூளகிரி பஜார் தெருவைச் சேர்ந்த ஜோஸ்வின் (50) என்ற பெண்மணி, அதே அரசு பேருந்தில் ஏறினார். அவர் இருக்கையில் அமர்ந்தபோது, அங்கிருந்த கைப்பையைக் கண்டார். அந்தப் பையைத் திறந்து பார்த்த ஜோஸ்வின், உள்ளே கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார்.
ஒரு கணம் கூட யோசிக்காமல், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு நேராக சூளகிரி காவல் நிலையத்திற்குச் சென்றார். அந்தப் பையை போலீசாரிடம் ஒப்படைத்து, நடந்த அனைத்தையும் விளக்கமாகக் கூறினார். ஜோஸ்வின் காட்டிய இந்த நேர்மை அங்கிருந்த காவலர்களைப் பெரிதும் கவர்ந்தது.
அடையாள அட்டை - பாராட்டு
காவல் துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, கைப்பையில் இருந்த அடையாள அட்டை, செல்போன் எண் மற்றும் இதர ஆவணங்களை ஆய்வு செய்தனர். அந்த ஆவணங்களின் மூலம், பணத்தைத் தவறவிட்டது முனிரத்னா என்பது உறுதி செய்யப்பட்டது.
காவல் துறையினர் முனிரத்னாவைத் தொடர்பு கொண்டு, அவர் தொலைத்த பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். ஸ்டேஷனுக்கு ஓடோடி வந்த முனிரத்னா, தனது பணம் பத்திரமாக இருப்பதைக் கண்டு கண்ணீர் மல்க மகிழ்ச்சி அடைந்தார். பேருந்தில் பணத்தைத் தவறவிட்டுத் தேடி அலைந்த அவருக்கு, காவல்துறையின் அழைப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
நேர்மையான பெண்
தான் இழந்த பணம் முழுமையாகத் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த முனிரத்னா, ஜோஸ்வினுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
காவல் துறையினரும், இக்கட்டான சூழலில் நேர்மையின் அடையாளமாகத் திகழ்ந்த ஜோஸ்வினைப் பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தனர். ஒரு சாதாரணப் பெண்ணின் இந்த உன்னதமான செயல், சூளகிரி பகுதி மக்கள் மட்டுமன்றி, சமூக வலைதளங்களிலும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. நேர்மை ஒரு போதும் தோற்பதில்லை என்பதற்கு ஜோஸ்வின் ஒரு சிறந்த உதாரணம்.












Click it and Unblock the Notifications