சாம்பாரில் கிடந்த “மனிதப்பல்” - ஹோட்டல் ஊழியருக்குக் கத்திக் குத்து!
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஹோட்டல் ஒன்றின் சாம்பாரில் மனிதப்பல் கிடந்ததால் ஹோட்டல் ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் அருகிலுள்ள இரும்பூரைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் பாலகிருஷ்ணன். இவர், திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர் பகுதியில் தங்கி அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இதேபோல், சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர், மூலக்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் பிச்சம்பாளையம் புதூர் பகுதியில் உள்ள தனியார் சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன் வேலை செய்யும் உணவகத்துக்கு முத்துப்பாண்டி செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் உணவருந்தி கொண்டிருந்த போது பாலகிருஷ்ணன் ஊற்றிய சாம்பாரில் மனித பல் கிடந்துள்ளது.
இதைப் பார்த்த முததுப்பாண்டி பல் கிடந்தது குறித்து தனக்கு உணவு பரிமாறிய பாலகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி அங்கிருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனின் வயிற்றிலும், தொடையிலும் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக முத்துப்பாண்டியை அனுப்பர் பாளையம் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications