2 நாளாக சிக்காத சிறுத்தை! மைசூர் டூ மயிலாடுதுறைக்கு ரயிலில் வந்ததா? நடந்தது என்ன?
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இரு நாட்களாக பிடிபடாமல் போக்கு காட்டி வரும் சிறுத்தை, காட்டுப் பகுதியில் இருந்து ரயிலில் வந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த 2 ஆம் தேதி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதிப்படுத்தினர்.

நேற்று அதிகாலை மீண்டும் செம்மங்குளம் பகுதிக்கு வந்த சிறுத்தை அங்கு வாய்க்காலில் சுற்றித் திரிந்த பன்றியை கடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் சிறுத்தையை யாராவது பார்த்தால் உடனே 9360889724 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர். இரு நாளாகியும் சிறுத்தை நடமாட்டம் இல்லாததால் மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் இன்று மட்டும் 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். விரைவில் சிறுத்தையை பிடிப்போம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் பள்ளிகளில் காவல் துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறுகிறது.
வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 10 குழுக்கள் அமைத்து சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செம்மங்குளம் பகுதியில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதிக்கு சிறுத்தை சென்றதை அதன் காலடியை கொண்டு வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பகல் நேரத்தில் வெயிலால் சிறுத்தை எங்கும் அலையாமல் ஒரு இடத்தில் படுத்திருக்கும். எனவே இரவு நேரத்தில் சிறுத்தையின் உடல் வெப்பநிலையை வைத்து டிரோன் மூலம் அதன் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு சிறுத்தையை பார்த்ததாக அப்பகுதியை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். அதிகாலை தூங்கி கொண்டிருந்த போது நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டு எழுந்துள்ளார். அப்போது நாய்கள், சிறுத்தையை துரத்திச் சென்றதாம்.
பதிலுக்கு நாய்களை சிறுத்தை துரத்திச் சென்றதாம், இதையடுத்து சிறுத்தை சென்றவுடன் காவல் நிலையத்தில் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். மதுரையில் இருந்து இரு கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. திண்டுகக்கலில் இருந்து வனத்துறையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில் சிறுத்தையா, சம்பந்தமே இல்லையே என பலர் நினைக்கிறார்கள்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியிருப்பதாவது: காடுகளில் இருந்து சிறுத்தை ஆறுகள் வழியாக மயிலாடுதுறைக்கு வந்திருக்கலாம். இல்லாவிட்டால் அதிகம் காடுகளை கொண்ட மைசூரிலிருந்து மயிலாடுதுறைக்கு வரும் ரயில் மூலம் வந்திருக்கலாம் என்கிறார்கள். அனேகமாக அது சரக்கு ரயிலாக இருக்கலாம் என தெரிகிறது. பயணிகள் ரயிலில் சிறுத்தை வருவதற்கான வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications