விஜய்க்கு உளவுத்துறை வார்னிங்.. அவசர அவசரமாக இன்று கணக்கில் ஏறிய உரிமைத் தொகை.. எப்படி நடந்தது?
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. முந்தைய திமுக அரசின் பிரதான திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக நேற்று (மே 14) அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழகம் முழுவதும் அடித்தட்டு எளிய பெண்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பும் எதிர்ப்பும் கிளம்பியது. இதன் எதிரொலியாக, இன்று (மே 15) காலை முதலே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு மே மாதத்திற்கான ரூ.1000 உரிமைத் தொகை அவசர அவசரமாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின் பெரிய உளவுத்துறை வார்னிங் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கொந்தளித்த பெண்கள்: பின்னணியில் என்ன நடந்தது?
திமுக ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குள் பெண்களின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 துல்லியமாக வரவு வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தவெக தனது தேர்தல் அறிக்கையில் "மதிப்புமிகு மகளிர் திட்டம்" மூலம் இந்தத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், நேற்று வெளியான அரசு அறிவிப்பில், "திட்டத்தை மறுசீரமைக்க கால அவகாசம் தேவை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், "ரூ.2,500 தருவீர்கள் என்று பார்த்தால், ஏற்கனவே வந்து கொண்டிருந்த 1,000 ரூபாயையும் இழுத்தடிக்கிறீர்களா?" என்று ரேஷன் கடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் தங்களின் குமுறல்களை வெளிப்படுத்தத் தொடங்கினர். இந்த விவகாரத்தை கையில் எடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?" என்று எக்ஸ் (X) தளத்தில் காரசாரமாகக் கேள்வி எழுப்பி, மக்கள் மத்தியில் தவெக அரசுக்கு எதிரான பிம்பத்தை தீவிரப்படுத்தினார்.
முதலமைச்சருக்கு வந்த உளவுத்துறை 'வார்னிங்' மெசேஜ்!
தேர்தல் முடிந்து ஆட்சி அமைந்த கையோடு, முதல் வாரத்திலேயே பெண்களின் மத்தியில் இவ்வளவு பெரிய அதிருப்தி உருவாவது அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை அதிகாரிகள் உணர்ந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெண்கள் மத்தியில் நிலவிய அதிருப்தி அலை குறித்து முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரிகளிடம் இருந்தும், உளவுத்துறையிடம் இருந்தும் அவசர 'வார்னிங்' ரிப்போர்ட் சென்றதாகக் கூறப்படுகிறது.
"நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி திட்டத்தைத் தாமதப்படுத்தினால், அது புதிய அரசுக்கு எதிரான மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக மாறிவிடும். குறிப்பாக பெண் வாக்காளர்கள் மத்தியில் தவெக மீதான நம்பகத்தன்மை குறையக்கூடும்" என்று அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டது.
ஒரே இரவில் மாறிய உத்தரவு - இன்று கணக்கில் ஏறிய பணம்!
உளவுத்துறை மற்றும் அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் உடனடியாக நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். "மறுசீரமைப்புப் பணிகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் மே மாதத்திற்கான தொகையை உடனடியாக விடுவியுங்கள்" என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் விளைவாக, இன்று (மே 15) காலை முதலே லட்சக்கணக்கான பெண்களின் மொபைல் போன்களுக்கு "ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது" என்ற குறுஞ்செய்தி (SMS) வரத் தொடங்கியுள்ளது. நேற்று கிளம்பிய ஆவேசம், இன்று பணம் வந்தவுடன் சற்று தணிந்திருந்தாலும், தேர்தல் வாக்குறுதியான ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் இன்னும் நீடிக்கவே செய்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் வாரத்திலேயே, எதிர்க்கட்சிகளின் அரசியல் அழுத்தத்திற்கும், மக்களின் எதிர்ப்பிற்கும் பணிந்து தவெக அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications