இப்படி ஒரு தீபாவளி போனஸை வாழ்நாளில் பார்க்க முடியாது.. இன்ப அதிர்ச்சி கொடுத்த நீலகிரி சிவக்குமார்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தனது டீ எஸ்டேட்டில் பணியாற்றும் 15 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக அவரவர் விரும்பும் வாகனங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார். இந்த வீடியோ தான் சமூக வலைதளத்தில் இப்போது பேசுபொருளாக மாறி உள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. இன்னும் சில நாளில் தீபாவளி போனஸ் பல நிறுவனங்களில் போடப்போகிறார்கள். இதனால் தீபாவளி போனஸ் யார் யாருக்கு எவ்வளவு போடுவார்கள் என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.இன்னும் 10 நாளில் வரப்போகும் தீபாவளிக்கு பலர் போனஸில் தான் துணி வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சிலர் தீபாவளி போனஸை வைத்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள்.

இதனிடையே தீபாவளி போனஸ் என்பது ஐடி நிறுவனங்கள் உள்பட கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பெரும்பாலும் கிடைப்பது இல்லை.. தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் வேலை செய்வோருக்கு தான் வழங்கப்படுகிறது.

தீபாவளி போனஸ் என்பது சில நிறுவனங்களில் இரண்டு மாத சம்பளம் தருவார்கள், சில நிறுவனங்களில் ஒரு மாத சம்பளம் தருவார்கள், சில நிறுவனங்களில் கருணை தொகையாக சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும்.. சில நிறுவனங்கள் தீபாவளி பரிசாக கார் கூட வழங்கி உள்ளார்கள். சில நிறுவனங்கள் நிறைய பரிசுகளை தருகின்றன. இந்நிலையில் தீபாவளி போனஸ் வாங்க போகிறவர்களும், தீபாவளி போனஸ் வாங்கியவர்களும், தீபாவளி போனஸை கண்ணிலேயே பார்க்காதவர்களும் நீலகிரியில் நடந்த சம்பவத்தை பாருங்கள்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் டீ எஸ்டேட் வைத்திருப்பவர் சிவகுமார். இவர் மற்ற நிறுவனங்களை போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் தீபாவளி போனஸ் வழங்கி உள்ளார். தன்னிடம் பணியாற்றும் 15 தொழிலாளர்களுக்கு எந்த வாகனம் பிடிக்கும் என்று கேட்டு வைத்திருக்கிறார்.

அந்த வாகனத்தை இன்று தீபாவளி பரிசாக சர்ப்ரைஸ் கிப்ட்டாக வழங்கி உள்ளார். சிலர் புல்லட் வாகனத்தையும், சிலர் ஹீரோ, ஹோண்டா, பஜாஜ் என பிடித்த வாகனத்தை கேட்டிருந்த நிலையில், அவர்களை அழைத்து அதனை பரிசாக வழங்கினார். இந்த இன்ப அதிர்ச்சியால் நெகிழ்ந்து போன தொழிலாளர்கள் உரிமையாளர் சிவகுமாருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications