Oneindia Exclusive: திருச்செந்தூர் முருகா நீயே கேளு! ஆலயத்தில் நடக்கும் அட்ராசிட்டி.. நடப்பது என்ன?
திருச்செந்தூர்: தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கோவிலுக்கு வரும் சிலரை எளிதாக தரிசனம் செய்ய வைப்பதாக இடைத்தரகர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நபர் ஒருவருக்கு 2000 வரை வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள். இந்த மோசடி எப்படி நடக்கிறது, யாருக்கெல்லாம் உடந்தை.. விவரிக்கிறது இந்த சிறப்புச் செய்திக்குறிப்பு.
"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என்பார்கள். இப்படி மலைப்பகுதிகளில் தனது கோயில்களை அமைத்துக் கொண்ட முருகப்பெருமான் விதிவிலக்காக கடற்கரையில் குடி கொண்டிருக்கும் அற்புத ஆலயம்தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். திருச்செந்தூர் முருகன் கோவிலில்தான்.. வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வரும்போது உயர உயர போகும் வகையில் பாதை அமைந்துள்ளது. செந்தூர் வேலனை கும்பிட்டவருக்கு இனி வாழ்வில் ஏற்றம்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த நடைபாதை.

அறுபடை வீடுகளில், இரண்டாம் படைவீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகனை வழிபடுவதன் மூலம், திருமண தடை நீங்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை. மேலும், வைகாசி விசாகத்திற்கு விரதமிருந்து திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசித்து விட்டு மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யும் சிறப்பு வழக்கமும் இந்த தலத்தின் தனிச் சிறப்பு.
கட்டணம்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தரிசனத்திற்காக பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய 250 ரூபாய் சிறப்பு தரிசனமும், 100 ரூபாய் மற்றும் 20 ரூபாய் கட்டணம் தரிசனமும், பொது தரிசனமும் நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு, விஐபி தரிசனத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. தற்போது 100 ரூபாய் கட்டண தரிசனமும், பொது தரிசனமும் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது.
பக்தர்கள் வெள்ளம்: முருகன் புகழ் பரவ பரவ, கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடலா கடல் அலையா என தெரியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திருச்செந்தூர் நோக்கி அணி அணியாக செல்கிறது. அதிலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களோடு சூரசம்காரத்தின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க வருவர். அது மட்டுமல்ல சுப முகூர்த்த தினங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் இங்கு நடப்பது வழக்கம். அப்படியாக கூட்டம் அதிகம் இருக்கும் நாட்களில் பக்தர்களை குறி வைத்து இடைத்தரகர்கள் கும்பல் வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரித்த போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன.
இடைத்தரகர்கள்: கோவிலுக்கு தொடர்பு இல்லாத சிலரும் சில "ஒப்பந்த பணியாளர்களும்" கோவிலில் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருவது தெரிய வந்திருக்கிறது. அவசரமாகவோ அல்லது எளிதாகவோ தரிசனம் செய்ய வரும் நபர்களை "குறி வைத்து" அவர்கள் வசூல் வேட்டை நடத்துகின்றனர். நபர் ஒருவருக்கு 500 முதல் 2000 ரூபாய் வரை காசு பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களும் உடந்தை எனக் கூறப்படுகிறது.
காரை விட்டு இறங்கியதும்: காரில் வந்து கோயில் அருகே இறங்கினால் போதும்.. சில இடைத்தரகர்கள் பக்தர்களை சூழ்ந்து கொண்டுவிடுகிறார்கள். அவர்கள் கையில் பணப் புழக்கம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புதான் இதற்கு காரணம்.. "வாங்க சார், வாங்க.. எளிதாக தரிசனம் செய்யலாம், காத்திருக்க வேண்டாம், நாங்கள் அழைத்துச் செல்கிறோம்.." எனக் கூறி அழைத்துச் செல்கின்றனர். அவர்களிடம் முன்னதாகவே பணத்தைப் பெற்றுக் கொண்டு, சண்முக விலாஸ் மண்டபம் வழியாக அழைத்துச் செல்கின்றனர். சுவாமி தரிசனம் முடிந்ததும் அவர்களை அனுப்பி வைக்கின்றனர். மேலும், அதிகாலை பூஜை தவிர மற்ற நேரங்களில் கோவிலில் இவர்களின் அட்டகாசம் அதிகரித்து வந்திருப்பதாகவே கூறுகின்றனர்.
சிறப்பு சலுகை: முருகனுக்கு சாற்றிய சந்தனம், பூ மாலை உள்ளிட்டவற்றை வாங்கித் தருவதற்கும் தனியாக காசு பார்ப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. திட்டமிட்டு எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என நெட்வொர்க்காகவே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். வசூலிக்கும் பணம் அவர்களுக்கு மட்டுமல்ல சில அதிகாரிகளுக்கும் அன்றைக்கே பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மேலும் இந்த செய்தி வெளியாகி விடக்கூடாது என்பதற்காக செய்தியை கசிய விடக்கூடும் என்று நினைக்கும், பலருக்கும் மாதாமாதம் பணம் கொடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை பக்தர்கள் இதுகுறித்துக் கேட்டால் அவர்களை கும்பலாக சேர்ந்து மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், கூடுதலாக பணம் கொடுத்தால், சிறப்பு தரிசனத்தின் போது முருகனுக்கு சாற்றிய சந்தனம், விபூதி, மாலை என சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் பிரசாதங்களை வாங்கி, அதிக விலைக்கு நைசாக, முக்கிய பிரமுகர்கள் தலையில் கட்டுவதும் வாடிக்கையாகி வருகிறது.
பரிகாரங்கள்: பரிகார ஸ்தலமாக திருச்செந்தூர் உருவெடுத்து இருப்பதும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதற்கு, ஒரு முக்கிய காரணம். தரிசனத்துக்கு வருபவர்கள் மட்டுமல்லாமல் பரிகாரங்களை தேவஸ்தானத்தின் மூலமாகவே செய்திருக்கிறோம் என சில பணத்தை கறப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. ஆனால், கோவில் சார்பில் எந்தவித பரிகாரங்களும் பூஜைகளும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்லாமல் பாதுகாப்பு குறைபாடுகள், போதிய வசதியின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடத்தில் எழுந்திருக்கிறது. முறையாக, பணம் கோவில் உண்டியலுக்கு போனால், கோவிலுக்கும் பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை அறநிலையத்துறை செய்து தர முடியும். ஆனால் இப்படி, யாரோ சிலர் கைகளுக்கு பணம் சென்று சேருவதால் பக்தர்களுக்குதான் பாதிப்பு என்பதை, பணத்தை தருவோரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்த தகவல்களை "ஒன்இந்தியாதமிழ்" குழு பல்வேறு சோர்ஸ்களிடம் விசாரித்து அறிந்துள்ளது. அதேநேரம், அதிகாரிகள் மற்றும் இடைத் தரகர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதிகாரிகளின் கருத்தை அறிந்து செய்தி பதிவிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது ஒன்இந்தியா குழு. நீங்கள் இதுபோல திருச்செந்தூர் முருகன் கோவிலில் இடைத்தரகர்களால், அல்லது வேறு யாராலாவது பணம் கேட்டு நச்சரிப்புக்கு உள்ளாகியிருந்தால் அதை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.












Click it and Unblock the Notifications