நடுரோட்டில் கட்டிப் புரண்டு உயிரைப் பணயம் வைத்து பக்ருதீனைப் பிடித்த இன்ஸ்பெக்டர்கள்!
சென்னை: போலீஸ் பக்ருதீனைப் போலீஸார் பிடித்தது பெரும் திகில் சம்பவமாக அமைந்துள்ளது. சீருடையில் செல்லாமல் மப்டி உடையில் போன இன்ஸ்பெக்டர் லட்சுமணன் என்பவர் பக்ருதீனை நடுரோட்டில் வைத்து மடக்கியபோது அவரை கடுமையாக தாக்கியுள்ளான் பக்ருதீன். அப்படியும் விடாமல் அவனது தாக்குதலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்த்த நிலையில், மிகவும் துணிச்சலாக அவனை மடக்கிப் பிடித்துள்ளார் இன்ஸ்பெக்டர் லட்சுமணன்.
அவருடன், இன்ஸ்பெக்டர் ரவீந்திரனும் சேர்ந்து பக்ருதீனைப் பிடிக்க போராடியுள்ளார். ஒரு கட்டத்தில் ஒருவரைப் போட்டு ஏன் இந்த இரண்டு பேரும் தாக்குகிறார்கள் என்று பொதுமக்கள் பக்ருதீன் மீது பரிதாபப்பட்டு பேசத் தொடங்கி விட்டனர்.
ஆனால் அதற்குள் போலீஸ் படை அங்கு வந்து விட்டதால் மக்களுக்கு உண்மை தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது...

தொழிலதிபர் வீட்டில் பதுங்கல்
போலீஸ் பக்ருதீன் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தோம். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதும், சென்னையில் நடைபெறும் திருப்பதி குடை ஊர்வலத்தில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்வதற்காக அவர் சென்னை வந்ததும் தெரிய வந்தது.

2 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட படை
இதையடுத்து டி.ஜி.பி. ராமானுஜம் நேரடி மேற்பார்வையில் செயல்படும் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், ரவீந்திரன் ஆகியோர் திருவல்லிக்கேணி பகுதிக்கு மாறுவேடத்தில் சென்றார்கள்.

பக்ருதீனுக்கு பைக் ஓட்டத் தெரியாது
போலீஸ் பக்ருதீனுக்கு மோட்டார் வாகனம் ஓட்டத்தெரியாது, பஸ் அல்லது ரெயிலில்தான் பயணம் செய்வார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

பஸ் ஏறி சூளைக்குப் போன பக்ருதீன்
இதனால், இன்ஸ்பெக்டர்கள் திருவல்லிக்கேணி பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது பக்ருதீன் மாநகர பஸ்சில் ஏறி சென்டிரல் ரெயில் நிலையம் சென்று, பின்னர் அங்கிருந்து, சூளை ரவுண்டானாவுக்கு சென்றார். அங்கு திருப்பதி குடை ஊர்வலம் வரும் பாதையை நோட்டமிட்டபடி நின்று கொண்டு இருந்தார்.

சரமாரியாக தாக்கிய பக்ருதீன்
அப்போது, அவரை இன்ஸ்பெக்டர்கள் 2 பேரும் சுற்றி வளைத்தனர். உடனே இன்ஸ்பெக்டர்களை பக்ருதீன் சரமாரியாக தாக்கத் தொடங்கினார். இந்த திடீர் தாக்குதலில் இரு இன்ஸ்பெக்டர்களும் நிலை குலைந்து விட்டனர். அதே நேரம் பக்ருதீன் தப்பிச் செல்ல விடாதபடி தடுத்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் கட்டி புரண்டு சண்டை போட்டனர்.

நடு ரோட்டில் சண்டை - மக்கள் வேடிக்கை
இன்ஸ்பெக்டர்கள் 2 பேரும் சாதாரண உடையில் இருந்ததால், அவர்கள் போலீஸ் அதிகாரி என்று தெரியாத பொது மக்கள், சண்டை நடப்பதை வேடிக்கை பார்த்தனர். ஒரு கட்டத்தில் ஒருவனை போட்டு 2 பேர் அடிக்கிறார்களே? என்று பக்ருதீனுக்கு ஆதரவாக மக்கள் பேசத் தொடங்கி விட்டார்கள். எனினும் யாரும் அருகில் வராமல் வேடிக்கை பார்த்தனர்.

வந்தார் வீரகுமார்
இதற்கிடையில் அப்பகுதியில் ரோந்து வந்த பெரியமேடு இன்ஸ்பெக்டர் வீரகுமார், கூட்டம் கூடியிருப்பதை பார்த்து வண்டியை நிறுத்தினார். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், ரவீந்திரன் ஆகியோரை நன்கு தெரியும் என்பதால், அருகே சென்றார்.

வீரா இவன்தான் பக்ருதீன்..
அப்போது இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வீரா இவன்தான் பக்ருதீன் என்று உரக்க குரல் கொடுத்தார். உடனே பக்ருதீனை இன்ஸ்பெக்டர் வீர குமாரும் சரமாரியாகத் தாக்கியதால் பக்ருதீன் நிலை குலைந்து கீழே விழுந்தது விட்டார்.

அவர்களைத் தானே கொல்கிறோம்...
அவனை இரு கைகளையும் பின்புறமாக வைத்து கட்டி, தன் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் வீரகுமார் ஏற்றினார். அப்போது, போலீசை நான் என்ன செய்தேன்? எதுக்கு அடிக்கிறீர்கள்? அவர்களை (இந்து அமைப்பினரைத்) தானே கொல்கிறோம் என்று பக்ருதீன் கூறி இருக்கிறான்.

பக்ருதீன் கொடுத்த தகவல்
பின்னர் பக்ருதீனை நேரு ஸ்டேடியம் அருகே ஜீப்பில் அழைத்து வந்தனர். அங்கிருந்து மற்றொரு வாகனத்தில் மாற்றி, ரகசிய இடத்துக்கு பக்ருதீனை அழைத்து சென்றார்கள். அவர்களில் ஒருவரான இன்ஸ்பெக்டர் லட்சுமணன்தான், புத்தூரில் மற்ற 2 தீவிரவாதிகளை பிடிக்க சென்றபோது தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பதவி உயர்வுக்குப் பரிந்துரை
போலீஸ் பக்ருதீனை உயிரை பணையம் வைத்து பிடித்த 3 இன்ஸ்பெக்டர்களுக்கும் பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று முதல்வருக்குப் பரிந்துரை செய்யவுள்ளதாம் காவல்துறை.












Click it and Unblock the Notifications