தென்காசியில் தனியார் பள்ளி உரிமையாளர் வீட்டில் 100 சவரன் தங்கம், ரூ.20 லட்சம் கொள்ளை எப்படி நடந்தது?
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் நெல்லை மெயின்ரோட்டில் தனியார் மெட்ரிக் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் சென்னையிலும் தொழில் செய்வதால், சென்னையில் வசிக்கிறார். அவரது மனைவி மற்றும் மகன்கள் சொந்த ஊரில் இருந்து பள்ளியை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ராஜசேகரின் வீட்டில் இருந்து 100 பவுன் தங்க நகை, ரூ.20 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். எப்படி நடந்தது என்பதை பார்ப்போம்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினம் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் அப்பகுதியில் நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சி.பி.எஸ்.இ. பள்ளியும் பி.எட். கல்லூரியும் அதே பகுதியில் நடத்தி வருகிறார்.

தனியார் பள்ளி வளாகம்
ராஜசேகருக்கு சென்னையிலும் தொழில்கள் இருக்கிறது. இதனால் ராஜசேகர் சென்னையில் தான் பெரும்பாலும் இருப்பாராம். அவரது பள்ளிக்கூடங்கள், கல்லூரியின் நிர்வாகத்தை அவருடைய மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகன்கள் கவனித்து வருகிறார்கள். இவர்களது வீடு, பள்ளிக்கூட வளாகத்தின் பின்பகுதியில் இருக்கிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி மற்றும் அவரது மகன்கள், சென்னையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலையில் அவர்கள் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார் ராஜேஸ்வரி. அப்போது வீட்டில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்திருக்கிறது. வீட்டில் துணிகள் சிதறி கிடந்துள்ளது. பீரோக்களில் இருந்த சுமார் 100 பவுன் தங்க நகைகள், ரூ.20 லட்சம் கொள்ளை போயிருந்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, உடனே ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உடனே நேரில் வந்து விசாரித்தனர். போலீஸ் உயர் அதிகாரிகளும் நேரில் வந்து விசாரித்தனர்.
எப்படி நடந்தது
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருமணத்திற்காக வெளியூருக்கு ராஜேஸ்வரி குடும்பத்தினர் சென்றுவிட்டதையும், வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர் நள்ளிரவில் நைசாக மாடி வழியாக ஏறி வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள்.. பின்னர் பீரோக்களை உடைத்து திறந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
சிசிடிவி காட்சி
கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆலங்குளம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications