"ம், அப்பறம்".. டாக்டருடன் போனில் நர்ஸ்.. மெல்ல மெல்ல போன மல்லிகா உயிர்.. பரிதாப சிசு.. மக்கள் ஆவேசம்
தவறான சிகிச்சையே தாய் - சேய் மரணத்துக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் - சேய் இருவருமே அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய கொந்தளிப்பை அந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.. உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போனில் பேசியபடியே பலரும் தங்கள் பணியினை மேற்கொள்வதால், பல தவறுகள் நடந்துவிடுகின்றன.. சிலசமயம், அசம்பாவிதங்களும், அபாயங்களும் ஏற்பட்டுவிடுவது தொடர்கதையாகிறது.
பெரும்பாலான விபத்துகள் உட்பட இதற்கு எத்தனையோ சம்பவங்கள் உதாரணங்களாக உள்ளன.. ஒருமுறை, உத்தரப் பிரதேசம் குஷி நகர் அருகே பள்ளி மாணவர்கள் சென்ற வேன், ரயில் மீது மோதி 13 குழந்தைகள் இறந்துவிட்டன.
13 பிஞ்சுகள்
13 பிஞ்சுகளும் உயிரிழக்க முக்கிய காரணமாக இருந்ததே, அந்த வேன் டிரைவர் செல்போன் பேசியபடியே அலட்சியத்துடன் சென்றது என்பது விசாரணையில் அப்போது தெரியவந்ததையறிந்து, மக்கள் கொந்தளித்து போனார்கள்.. மருத்துவ துறை உட்பட எந்த துறையாக இருந்தாலும் அஜாக்கிரதைதான் பெரும்பாலான அசம்பாவிதங்களுக்கு அடிப்படையாக அமைந்துவிடுகிறது.. இப்போதும் கள்ளக்குறிச்சியில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. கல்வராயன் மலையில் உள்ளது ஆலனூர் என்ற கிராமம். இங்கு வசித்து வந்தவர் பாக்கியராஜ் - மல்லியா.. நிறைமாத கர்ப்பிணியாக இப்போது உள்ளார் மல்லியா..
அசம்பாவிதம்
இவருக்கு நேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது... எனவே, மல்லிகாவை பிரசவத்திற்காக சேரப்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர்... நேற்று இரவு 8:30 மணிக்கு மல்லிகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது... ஆனால், குழந்தை பிறந்ததுமே குழந்தை எவ்வித அசைவும் இல்லாமல் இருந்தது.. அதனால், குழந்தை இறந்து பிறந்திருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தொப்புள் கொடி
அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது... இதனால் குழந்தையின் நிலைமை சீரியஸாக இருப்பதை உணர்ந்து மேல் சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது... ஆனால், ஆம்புலன்ஸ் உடனடியாக வரவில்லை.. ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.. இதையடுத்து, கருவிலேயே தொப்புள் கொடி அறுந்து விட்டதால் மல்லிகாவிற்கு தையல் போட்டு சிகிச்சையும் தரப்பட்டது.
ரத்தக்கசிவு
ஆனால், இந்த சிகிச்சையின்போது, மல்லிகாவுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.. எவ்வளவோ முயற்சித்தும், ரத்தக்கசிவு நிற்கவேயில்லை.. தொடர்ந்து ரத்தம் நிற்காமல் வெளியேறியதால் மல்லிகா மயக்க நிலைக்கு சென்று, அப்படியே அவரும் உயிரிழந்துவிட்டார்.. அடுத்தடுத்த, தாயும் - சேயும் இறந்த சம்பவத்தை அறிந்து, உறவினர்கள் கொந்தளித்தனர். அதற்குள் ஊர்மக்களும் அங்கு திரண்டு வந்துவிட்டனர்.. அப்போதுதான், அந்த மருத்துவமனையில், முறையான டாக்டர்கள் இல்லை என்பதே தெரியவந்தது..
ட்ரீட்மென்ட்கள்
மேற்கண்ட ட்ரீட்மென்ட்களை தாய்-சேய்க்கு தந்தது அங்கிருந்த நர்ஸ்கள்தானாம்.. அவர்களும் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள்.. அதுமட்டுமல்ல, டாக்டர்கள் யாரும் இல்லாததால், நர்ஸ்கள், டாக்டர்களுக்கு போனை போட்டு, அவர்களை கேட்டு கேட்டே சிகிச்சைகளை தந்ததாகவும், அதனாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டன என்றும் கதறி அழுதனர்.. மேலும், சம்பந்தப்பட்டட மருத்துவமனையை முற்றுகையிட்டும், சாலை மறியல் ஈடுபட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு அந்த பகுதியில் ஏற்பட்டது.