கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிக் கொன்ற கணவன் கைது – சந்தேகத்தால் விபரீதம்
ஈரோடு: கர்ப்பிணியான மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் திம்பம் மலைப்பாதையில் உள்ள 25 ஆவது கொண்டை ஊசிவளைவுக்கு கீழே இருந்த அறுபது அடி பள்ளத்தில் கடந்த 13 ஆம் தேதி அடையாளம் தெரியாத நிலையில் பெண் பிணம் ஒன்று கிடந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். தமிழ்நாட்டின் எல்லையில் சம்பவம் நடந்ததால் கர்நாடக மாநிலத்தில் காணமல் போனவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வந்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள விஜயனைபுரம் பகுதியை சேர்ந்த மங்கம்மா என்பவர் தன்னுடைய மகளை 13 ஆம் தேதி முதல் காணவில்லை என்று விஜயனைபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், பிணமாக கிடந்த பெண் கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள விஜய்அனைபுரம் பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் பிரசாந்த் என்பவரின் மனைவி அனிதா என்பது தெரிந்தது.
மங்கம்மவிடம் தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த சமயத்தில், அனிதாவின் கணவர் பிரசாந்த் திடீரென தலைமறைவாகிவிட்டார். இதனால் போலீசாரின் சந்தேகப் பார்வை பிரசாந்த் மீது திரும்பியது.
இந்நிலையில், தமிழக, கர்நாடக போலீசார் இனைந்து பிரசாத்தை தேடிவந்தனர். இதனிடையே, கர்நாடகா மாநிலம், மைசூர் மாவட்டம், மருகூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி பிரசாத் சரணடைந்தார்.
கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் ஆசனூர் போலீசார் மருகூர் சென்று பிரசாத்தை கைது செய்தார்கள். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், "என்னுடைய மனைவியின் நடத்தையில் எனக்கு கடந்த சில நாட்களாக சந்தேகம் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில், எனது மனைவி கர்ப்பிணியானார். அதனால், எனக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டது. அதனால் அனிதாவை கொல்ல திட்டமிட்டேன். அதன்படி பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அவரை காரில் அழைத்து வந்தேன்.
பண்ணாரி அம்மனை தரிசனம் செய்தபின்னர் இயற்கை அழகை ரசிக்கலாம் என்று திம்பம் மலைப்பாதைக்கு அனிதாவை நைசாக கூட்டிச்சென்றேன். அங்கு பள்ளத்தை எட்டி பார்த்துக்கொண்டு இருந்த அனிதாவை யாரும் அந்த வழியாக வராத நேரம் பார்த்து திடீரென கீழே தள்ளிவிட்டேன்.
பெரிய பள்ளமாக இருந்தால் எப்படியும் இறந்திருப்பாள், உடலும் கிடைக்காது என்று நினைத்து காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். ஆனால் போலீசார் எப்படியோ என்னை நெருங்கிவிட்டார்கள். அதனால்தான் நானே சரண் அடைந்தேன்" என அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications