சந்தேக புயல் வீசினால் குடும்பம் சிதைந்து நாசமாத்தான் போகும்.. இந்த பரிதாபத்தை பாருங்க!
மனைவியை கொலை செய்துவிட்டு 2 குழந்தைகளுடன் போலீசில் கணவன் சரணடைந்துள்ளார்.
தேனி: சந்தேக புயல் சுழட்டியடித்தால் குடும்பம் சிதைந்து நாசமாகத்தான் போகும் என்ற நம் முன்னோர்களின் வாக்கு என்றுமே பலிக்காமல் இருந்ததில்லை.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவமுருகன். அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக உள்ளார். உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். அதனால் புள்ளக்காபட்டி கிராமத்தை சேர்ந்த கல்யாணப்பிரியா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியின் நடத்தை மீது சிவமுருகனுக்கு சந்தேகம் இருந்து கொண்டே வந்தது. அதனால் அடிக்கடி தகராறும் தொடர்ந்து கொண்டே வந்தது.

இதேபோல இன்று காலையும் சந்தேகம் காரணமாக தகராறு ஏற்பட்டு அடிதடியும் நடந்திருக்கிறது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிவமுருகன், மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், தன்னுடைய 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு சிவமுருகன், ஆண்டிப்பட்டி காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.
நடந்ததையெல்லாம் போலீசாரிடம் விளக்கினார். இதையடுத்து இரண்டு குழந்தைகளையும் சிவமுருகனின் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் கல்யாணப்ரியாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இரண்டு குழந்தைகளையும் பெற்ற பின்னர், மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவனின் இந்த வெறிச்செயலினால் மாவட்ட மக்களின்றி தமிழக மக்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். சந்தேகம் என்னும் உயிர்க்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டது கடைசியில் அந்த குழந்தைகள்தான். ஒரு குழந்தைக்கு வயது 2. மற்றொரு குழந்தைக்கு வயது 1. ஒன்றுமே அறியாத அந்த இரு பிஞ்சு பெண் குழந்தைகள் தாய், தகப்பனை எதிர்பார்த்து அழுது கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications