பூப்பறிக்கச் சென்ற கணவன்-மனைவி... மின்சாரம் தாக்கி இருவரும் பலி
புதுக்கோட்டை: புதுகையில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இருவருமே பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மாங்காடு ஊராட்சி, பட்டிபுஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பா. இவருக்கு அதே பகுதியில் பூந்தோட்டம் உள்ளது.
அதிகாலை பூ பறிப்பதற்காக சின்னப்பாவும், அவரது மனைவியும் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். தோட்டத்திற்குள் உயர்மின்னழுந்த மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் அவரது மனைவி காலை வைத்துள்ளார்.
இதில் மின்சாரத்தில் தாக்கப்பட்ட அவர் அலறி துடித்தார். இதனை பார்த்த சின்னப்பா அவரை காப்பாற்ற இழுத்தபோது சின்னப்பா மீதும் மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே சின்னப்பா மனைவி உயிரிழந்தார்.
உயிரிழக்கு போராடிய சின்னப்பா பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.