போராட்டங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு.. மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இரண்டாம் கட்ட ஏலத்தில் நாகப்பட்டினம் மாவட்டதின் 474 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 4 கிணறுகள் அமைப்பதற்கான அனுமதி இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக திறந்த வெளி அனுமதிக் கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஹைட்ரோ கார்பன் வளங்களை, ஒரே உரிமத்தின் மூலம் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பதே இக்கொள்கையின் நோக்கமாகும்.
அதன்படி முதல்கட்ட ஏலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. அந்த ஏலத்தில் இந்தியா முழுவதும் எண்ணெய் வளம் மிக்க 55 இடங்களில் 41 இடங்களை வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்தது. மீதமுள்ள இடங்களில் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றன. ஏலம் விடப்பட்ட 55 இடங்களில் மூன்று இடங்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றில் 2 இடங்களை வேதாந்தாவும், 1 இடத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனமும் பெற்றிருந்தது.
இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஏல அறிவிப்பு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் விடுக்கப்பட்டது. இதில் இரண்டாம் கட்ட ஏலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 474 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4 கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது.. அமைச்சர் சிவி சண்முகம் திட்டவட்டம்
மூன்றாம் கட்டத்தில் நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்து 863 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 16 கிணறுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1863 சதுர கிலோ.மீட்டர் பரப்பளவில் 16 கிணறுகளுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ப்ளாக் 1 நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியின் 459.83 ச.கி.மீ பரப்பளவில் கொள்ளிடம், திருத்தோனிபுரம், ஆனந்ததாண்டவபுரம், நீடூர், காளி, திருக்கடையூர், ரெட்டைக்குடி, தெனங்குடி, காரைக்கால் ஆகிய இடங்களில் அமையவுள்ளது.